Sunday 10 January 2016

இலங்கை வரலாறு பகுதி 2

வரலாறு

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது இற்றைக்கு 125,000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். மேலும் 500,000 வருடங்களுக்கு முற்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன. இக்காலப்பகுதி பழங்கற்காலம்இடைக்கற்காலம் மற்றும் முன் இரும்புக்காலம் ஆகியனவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கற்கால மனிதக் குடியிருப்புக்களில் 37,000 வருடங்கள் பழமையான பாகியன்கல (இது சீனப் பயணியும் பௌத்தத் துறவியுமான பாகியன் நினைவாகப் பெயரிடப்பட்டது.), பட்டதொம்பலேன (28,500 வருடங்களுக்கு முன்) மற்றும் பெலிலென (12,000 வருடங்களுக்கு முன்) ஆகியவை மிகவும் முக்கியத்துவம் மிக்கவை. இக்குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட, நவீன மனிதனையொத்த பலாங்கொடை மனிதனின் எச்சங்கள் இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டமையையும் விளையாட்டுக்களுக்காக நாய்களைப் பழக்கி வந்துள்ளமையையும் அறியத் தருகின்றன.
மாத்தளை மாவட்டத்திலுள்ளசிகிரியா கோட்டை ஓவியங்கள், 5ம் நூற்றாண்டு.
இத்தீவினைப் பற்றிய முதலாவது எழுத்துமூல ஆவணத்தைத் தமிழகக் காவியமான கம்ப இராமாயணத்தில்காணமுடிகிறது. இதில், செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்டலங்கா என்ற ராச்சியத்தைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. மேலும் குபேரன் தனது சகோதரனானஇராவணன் என்ற அசுரனால் வெற்றி கொள்ளப்பட்டதாகவும் இராவணனிடம் பறக்கும் புட்பக விமானம் இருந்ததாகவும் இது குறிப்பிடுகிறது. இன்றைய நகரான வாரியப்பொல எனும் இடமே இராவணனது விமான ஓடுபாதையாக இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது.
இலங்கையின் ஆரம்பகால குடியேறிகள் இன்றைய இலங்கையில் வாழும் வேடர்கள் எனும் ஆதிக்குடிகளின் மூதாதையர்களாக இருக்கலாம். இவர்களது சனத்தொகை தற்போது அண்ணளவாக 2,500 ஆகும். ஐரிய வரலாற்றாய்வாளரான ஜேம்ஸ் எமர்சன் தெனன்ட் என்பவர், இலங்கையின் தென்பகுதி நகரான காலியே பண்டைய துறைமுக நகரான தர்சீசுவாக இருக்கலாமெனக் கருதுகிறார். இங்கிருந்தே சாலமோன் மன்னன் யானைத் தந்தங்களையும் மயில்களையும் ஏனைய பெறுமதி மிக்க பொருட்களையும் பெற்றுக்கொண்டான் எனப்படுகிறது.

பண்டைக்காலம்

அவுக்கண புத்தர் சிலை, கிபி 5ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த தாதுசேனனால் கட்டப்பட்ட இது 12 m உயரமுடைய நிற்கும் புத்தர் சிலையாகும்.
பாளி மொழியில் எழுதப்பட்ட நூலான மகாவம்சத்தின் படி, இலங்கையின் ஆதிக் குடிகள் இயக்கரும் நாகரும் ஆவர். ஆயினும் சிங்களவரின் வரலாறு கிமு 543ல் விசயனின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. விசயன் என்பவன் மேற்கு வங்காளத்தின் ரார் பகுதியின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வந்தவனாவான். இவன் தனது 700 தோழர்களுடன் எட்டுக் கப்பல்களில் 860 கடல் மைல் தூரம் பயணித்து இலங்கையை அடைந்தான். இவன் மன்னாருக்கு அருகே தம்பபன்னி எனும் அரசை உருவாக்கினான். தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ராசாவலிய போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் சுமார் 189 மன்னர்களில் முதலாமவனாவான். இலங்கையின் அரசு வரலாறு கிமு 543இலிருந்து கிபி 1815 வரையிலான 2359 வருட கால அளவைக் கொண்டது. 1815ல் இது பிரித்தானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.
சிகிரியா, குன்றுக் கோட்டை.
கிமு 380ல் பண்டுகாபயன் ஆட்சியின் போது இலங்கை அரசு அனுராதபுரத்துக்கு நகர்ந்தது. அன்றிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைநகராக அனுராதபுரம் விளங்கியது. பண்டைய இலங்கையர் குளங்கள், தாகபைகள் மற்றும் மாளிகைகள் போன்ற கட்டுமானங்களை அமைப்பதில் சிறந்து விளங்கினர். தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து பௌத்த சமயத்தின் வருகையால் இலங்கையின் சமூகக் கட்டமைப்பு பாரிய மாற்றமடைந்தது. கிமு 250ல், மௌரியப் பேரரசர் அசோகனின் புதல்வனான மகிந்த தேரர் (சமக்கிருதம்महेन्द्र; மகேந்திர) பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் மிகிந்தலைக்கு வந்தார். இவரது முயற்சியால் தேவநம்பியதீசன் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு ஏனைய சிங்கள மக்களும் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர். இலங்கையில் தொடர்ந்து வந்த அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான பௌத்தப் பள்ளீகளையும் மடாலயங்களையும் பராமரித்ததோடு தென்கிழக்காசியாவின் ஏனைய நாடுகளுக்குப் பௌத்தம் பரவவும் உதவி புரிந்தன. இலங்கைப் பிக்குகள், பிற்பாடு முகமது கில்சியால் அழிக்கப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய பௌத்தப் பல்கலைக்கழகமான நாலந்தாப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர். நாலந்தாவின் பல ஆக்கங்கள் இலங்கையின் மடாலயங்களில் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. கிமு 245ல், பிக்குணி சங்கமித்தை போதிமரக் கிளையுடன் வந்தடைந்தார். இக்கிளை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் பகுதியாகக் கருதப்படுகிறது. இதுவே உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகக் (வரலாற்றாதாரங்களின் படி) கருதப்படுகிறது. (போதிவம்சம்)
சூரதீச மன்னனின் காலத்தில் இலங்கை மீது முதல் வெளிநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. தென்னிந்தியாவிலிருந்து வந்த குதிரை வணிகர்களான சேனன் மற்றும் குத்திகன் ஆகியோர் சூரதீசனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். கிமு205ல் சோழ மன்னனான எல்லாளன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் அசேலனைத் தோற்கடித்து 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். விசிதபுர போரில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தான். இவன் தென் பகுதி அரசான உறுகுணையின் அரசனான கவந்தீசனின் மூத்த மகனாவான். துட்டகைமுனு இலங்கையின் இரண்டாவது தாதுகோபமான ருவன்வெலிசாயவையும் லோவமகாபாயவையும் அமைத்தான். இலங்கை அரசு அதன் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றில் அதன் தென்னாசிய அயல் அரசுகளான சோழ, பாண்டிய, சேர, பல்லவ அரசுகளால் குறைந்தது எட்டு முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கலிங்க நாடு (இன்றைய ஒடிசா) மற்றும் மலாயத் தீபகற்பம் ஆகியவற்றிலிருந்தும் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. தாதுசேனன் ஆட்சியின்போது கலா வாவி மற்றும் அவுக்கண புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டன.
குளோடியசு தொலமியின் கிபி 1ம் நூற்றாண்டு கால இலங்கை வரைபடம், 1535 வெளியீடொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.
ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரைக் கொண்ட நாடு இலங்கை ஆகும். கிமு 47-42 காலப்பகுதியில் அரசி அனுலா இலங்கையை ஆட்சிபுரிந்துள்ளாள். இலங்கை மன்னர்கள் சிகிரியா போன்ற குறிப்பிடத்தக்க கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். "வானில் அமைந்த கோட்டை" என வர்ணிக்கப்படும் சிகிரியா கிபி 477இலிருந்து 495வரை ஆண்ட முதலாம் காசியப்பனால் கட்டப்பட்டது. சிகிரியாக் கோட்டை பாரிய மதிற்சுவர்கள் மற்றும் அகழிகளால் சூழப்பட்டது. இப் பாதுகாப்பு அரணுக்குள் பூந்தோட்டங்கள், குளங்கள், மண்டபங்கள், மாளிகைகள் மற்றும் ஏனைய கட்டடங்கள் என்பன காணப்பட்டன. 1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது.இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22-கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர்.

மத்திய காலம்

பண்டைய தலைநகரான பொலன்னறுவையிலுள்ள பௌத்த சிலை, 12ம் நூற்றாண்டு
இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது.பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான்.இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும்.
இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215ல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான்.இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது.

தொடரும்........

0 comments:

Post a Comment